என்னுடைய முதல் கவிதை இது, என்னுடைய குரு ஒளிப்பதிவாளர் திரு.செழியன் சார், ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த கவிதைகளை படிச்சு தான் நான் கவிதை எழுத கத்துகிட்டேன்.
செழியன் சார் என்னுடைய ஆஸ்தான குரு அவோரடா எழுத்துக்கள் தான் என்னையும் எதோ எழுத வைத்தது.
இந்த நினைவுகள் கவிதையும் அவர் எழுதிய கவிதையின் சாயல் தான் இதில் இருக்கும் வலிகளும் உணர்வுகளும் என்னுடையது என்றால் 90% வார்த்தைகள் அவருடையது தான்... அவருக்கு என் பரிசுத்த நன்றிகள் சொல்ல நான் கடமைபட்டிருக்கேன்..
சூரியன் இல்லாத அறையில்
நாம் சந்தித்தோம் முதன் முதலாய்
நீலக்குழல் விளக்குகள் படபடத்து இமைக்க
சுவர் கடிகாரம் ஏழுமுறை அதிர்ந்து ஓய்ந்தது
அப்போது
எழுந்து செல்கின்றனர் சிலர்
வந்து அமர்கின்றனர் சிலர்
எழுந்து செல்பர்களில் நீயும்
வந்து அமர்பவர்களில் நானும் ...
சிறிய அந்த நுழைவில்
நாம் ஒருவரை ஒருவர் கடக்கும் போது
உன் கண்ணில் நானும்
என் கண்ணில் நீயும்
மிதந்து வெளியேறினோம்
அது ஒரு அரசுக்கலை கல்லூரி
எங்கள் வகுப்பு மேல் தளத்தில் இருந்தது
ஆரம்ப வகுப்பின் முதல் மாதங்கள்
பின் மாலைப்பொழுது உன் வகுப்பு முடிவதும்
என் வகுப்பு துவங்குவதுமாக
முடிந்து துவங்கும் கணங்களின்
இடைவெளியில் மலரும் நம் காலம்
சன்னலோர இருக்கையில்
ஐந்தாம் என்னிட்ட இருக்கை நமது
நீ எழுந்த இருக்கையில் வந்து அமர்கிறேன் நான்
இருக்கையின் வலப்புற இடப்புற கம்பிகளில்
உன் கைபட்ட சுவடோவியம் ஒளிர்கின்றது
ஒரு நாள்
வகுப்பு நேரத்திற்கு முன்பே வருகிறேன் நான்
அறையின் மூலையில் உள்ள இருக்கையில்
அமர்ந்திருக்கிறாய்... காத்திருக்கிறேன்
பக்கம் மாற்றும் போது
எனை பார்த்துவிடுகிறாய்
பதட்டத்துடன் கை கடிகாரம் பார்க்கிறாய்
நான் முன்னதாக வந்துணர்ந்து புன்னகைக்கிறாய்
பின் உன் விரல்கள்
முன்னிலும் வேகமாய் இயங்க
கடிகார முட்கள் எழுப்பும் மணியோசை
மனசுக்குள் சொட்டு சொட்டாய் தெறிக்கும் மழை
கடிகாரத்தின் ஏழு மணியதிர்வுகள்
நீ புத்தகம் மூடி விடுகிறாய்
சப்த மழையின் ஊடாக
என் முன்னே நடந்து வந்து
பின் எனை கடக்கிறாய்
ஓரு பிரிவே சந்திப்பாக நிகழ்வது
நமக்கு மட்டும்தான்
நான் தாமதமாக வரும் நாட்களில்
படிக்கட்டுகளில் நிகழும் பிரிவும் சந்திப்போம்
குறுகலான அந்து படிக்கட்டுகளில்
நான் ஏற வரும்போதெல்லாம்
நீ இறங்கி வருகிறாய்
சிலமுறை நான்
பின்னிறங்கி வழிவிடுகிறேன்
சில முறை நீ மேலேயே நிற்கிறாய்
ஒருமுறை வேகமாக வந்ததில்
படிக்கட்டின் நடுவில் இருக்கிறோம் இருவரும்
திரும்பி செல்வது இயலாது பார்த்து நின்றுவிடுகிறோம்
நம் இடையே மூன்று படிக்கட்டுகள்
பேசலாம் என தோன்றும் தருணம்
தலை கவிழ்ந்து மெதுவாக முதற்படியில் இறங்குகிறாய்
முகம் நோக்கும் திரனில்லை இருவருக்கும்
நான் இடப்புறம் ஒதுங்கிகிறேன்
நீ சுவரில் ஒளிவது போல வலப்புறம் ஒதுங்குகிறாய்
என் உடம்பே இதயமாக துடிக்கிறது
இரண்டாவது படியில் இறங்குகிறாய்
குனிந்த என் பார்வை புலத்தில் உன் வளைக்கரம்
சுற்றிய புத்தகத்துடன் இறங்குகிறாய்
இருவரும் இப்போது ஒரே படியில்
மெல்லிய இடைவெளி
ஆடை உரசிவிடக்கூடதென்ற கவனம் நமக்கு
உறைந்து மீள்வதை போல
ஒரு கணம் நான் பேச நினைத்த
வார்த்தைகளையெல்லாம்
எடுத்து செல்வதை போல
அன்றைய பாடம் நடத்திய தாளுடன்
வெளியேறுகிறாய்
வெற்று தாளுடன் உள் நுழைகிறேன் நான்
இரண்டாண்டுகள் இப்படியாக கழிகின்றன
ஒரு நாள்
வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறாய் நீ
கடிகாரத்தின் மணியதிர்வுகள்
வழக்கமான் அதே புன்னகையுடன்
எனை நீ கடக்கிறாய் பின்பாயிரம்
மரங்கொத்திக்கள் சுவர் துளைப்பது போல
வெற்று சப்தங்களாக நிறையும் மனது
ஒரு நாள் நம் இருக்கையில்
நீ மறந்து விட்டு போன உன் கை கடிகாரம்
அழைக்கலாம் என நினைக்கும் தருணம்
நீ பின் நிற்கிறாய்.
மரங்கொத்திக்கள் பறந்து மறைய
மழை பெய்யும் அறை
நம் கண்கள் பேசிக்கொண்டிருக்க
உன் கடிகார மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது
எடுக்க நீளும் உன் மணிக்கரத்தில்
கடிகாரத்தின் நினைவாய் ஒரு வெள்ளை வளையம்
என் வாழ் நாட்களையெல்லாம்
எடுத்து செல்வதை போல
காலம் அணிந்து விடை பெறுகிறாய்
உன் குரலின் இசையாய் நிறையும் மனதும் அறையும்
தேர்வுகள் வருகின்றன
தேர்வுக்கு செல்லும் குழுவை
நிழற்ப்படம் எடுக்கும் சம்பிரதாயம்
பத்து முகங்கள் நூறு விரல்கலென
இந்த மூலையில் நீ
மறு மூலையில் நான்
உன்னையே நினைத்திருக்கிறேன்
நினைத்த ஒரு கணம்
நிழல் படமாய் உரையட்டுமே என
நாம் வகுப்புகள் அன்றுடன் முடிந்தன
தேர்வு அறையின் பிரதான வராண்டாவில் சந்தித்தோம்
உன் தோழிகளின் பின்னால் ஒளிந்து
ஒரு புன்னகையை அனுப்புகிறாய்
தேர்வுக்கு முந்தைய பெரு மழை சப்தம்
பின்பு நிகழ்ந்ததெல்லாம் வெறும் மௌனம்
நம் இருக்கை உனக்காகிறது
எதிரிலிருப்பது எனக்கு
எழுதி முடித்தவுடன் நம்
பார்வைகள் பேசிக்கொள்கின்றன
எனினும் இத்தனை காலமாக
நம்மிடையே பேசிக்கொள்ள
ஒரு வார்த்தை ஒரு அட்சரம் கூட இல்லை...
ஒருவித வலிகளுடன் அனைவரும பிரிகிறோம்
தேர்வு முடிவு வந்த நாளில்.......
நீ வரக்கூடுமென கல்லூரி வருகிறேன்
நம் பெயர் ஒட்டப்பட்ட தாள் சுவர் ஆடிக்கொண்டிருக்கிறது
அனால் இன்னும் நீ வரவில்லை...
உனக்காக நாம் இன்னும் அங்கேயே காத்துக்கொண்டிருக்கிறேன்.....